கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நெல்லை மாவட்டத்தில் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன?
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன?
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வனராஜ். 60 வயதான இவர் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் 26 வயதான மாயாண்டி என்பவர் ஓட்டுநராக பணியாற்றினார். மேலும், இரும்பு தரம் பிரிக்கும் வேலையிலும் மாயாண்டி ஈடுபட்டுள்ளார். அண்மைக் காலமாக ஓட்டுநரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, இவர் தனக்கு ஒத்துவர மாட்டார் என கருதிய வனராஜ் திடீரென மாயாண்டியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். திடீரென வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் கடை உரிமையாளர் மீது இளைஞர் கடும் கோபம் கொண்டுள்ளார். அதே கோபத்துடன் ஊருக்குள் சுத்தியவர் வனராஜைப் பார்க்கும் போதெல்லாம் அடிப்பது போன்றே முறைத்துப் பார்த்துள்ளார்.
திடீரென வேலையை விட்டு தூக்கியதால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து செட்டில்மெண்ட் செய்ய கூறி மிரட்டியுள்ளார். அதற்கு முடியவே முடியாது என்று வனராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, பழைய இரும்பு குடோனுக்கு சென்ற மாயாண்டி, வனராஜிடம் வம்பிழுத்துள்ளார். அப்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஆத்திரத்தில் இரும்புக் கம்பியால் ஓனர் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த வனராஜ், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விக்ரமசிங்கபுரம் போலீசார் முதலில் மாயாண்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்தனர். வனராஜ் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி அவரை கைது செய்தனர். பணத் தகராறு காரணமாகத் தான் பழைய இரும்புக் கடை ஓனர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலையை விட்டு தூக்கிய ஆத்திரத்தில் கடை ஓனரை, தொழிலாளி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.