கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
“2024 தேர்தலில் பெரும்பாலான தவெக தொண்டர்கள் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என அப்போது வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர்” என சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் நியூஸ்18 தமிழ்நாட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தவெக தொண்டர்களின் ஆதரவால் தான் சீமானுக்கு 8% வாக்கு வந்தது என்பதை சொல்வதற்கான காரணம் குறித்து விளக்கம் கொடுத்தார்.
நியூஸ்18 தமிழ்நாட்டுக்கு நிர்மல் குமார் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: “பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் தெரியாது. மக்களுக்கு தெரியும் யார் பி டீம் என. ஊழல் செய்த எத்தனை திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய விசாரணை அமைப்புகள்?
திமுக – பாஜக இடையே மிக நல்ல உறவு உள்ளது. பாஜகவுக்கு திமுக, அதிமுக யார் இருந்தாலும் ஒன்று தான். எவ்வளவோ மிரட்டிப் பார்த்தார்கள், நாங்கள் எதற்கும் அடிபணியாமல் இருக்கிறோம். அதனால் எங்களை அப்படி பேசுகிறார்கள்.
எங்களுக்கு எல்லா தரப்பு மக்களின் ஆதரவும் உண்டு. திமுக வாக்குகளை மட்டும் பிரிக்கவில்லை. திமுக, அதிமுகவினர் வீடுகளிலும் எங்கள் வாக்கு உண்டு. பியூஷ் கோயலுக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியாது. தமிழ்நாட்டு மக்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பாஜக தமிழக களத்திலேயே கிடையாது. ஒரு சதவிகித வாக்கு வைத்துள்ளவர்களைப் பற்றி பேச வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக அவர் பேட்டியின் போது, “தவெக தொண்டர்களின் ஆதரவால் தான் சீமானுக்கு 8% வாக்கு வந்தது” எனத் தெரிவித்திருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலில், “சீமான் 2024 தேர்தலில் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். பெரும்பாலான தவெக தொண்டர்கள் நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள் என அப்போது வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தனர். அதன் அடிப்படையில் தான் அவருக்கு அந்த வாக்கு வந்தது. விஜய்யை தனது தம்பி என்று தான் சீமான் சொல்லிக்கொண்டிருந்தார். யாருக்கும் அடிபணியாமல் இருப்பேன் என விஜய் சொன்னதும், சீமான் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
சீமான் காமெடி செய்து கொண்டிருக்கிறார். அவர் அரசியலில் வென்று மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அவர் ஒரு யூடியுபர் போல தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
வைகோ, விஜயகாந்த், காங்கிரசு என ஒரு மூன்றாவது அணிக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இப்போது விஜய் கண்டிப்பாக முதல்வராக வருவார் என மக்கள் நம்புகிறார்கள். அதனால் எங்களுக்கு அந்த வாக்குகள் முழுவதும் வரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.