இப்படி மாறி மாறி இருகட்சிகளும் தங்களை கலாச்சாரக் காவலர்களாக முன்னிறுத்துவதோடு, தேர்தல் பிரசாரங்களில் மீன்களையும் உடன் எடுத்துச் செல்கின்றனர். அப்படி வங்காளத்துக்கும் மீனுக்கும் என்னதான் தொடர்பு?
வங்காளத்தில் மீன் என்பது வெறும் உணவல்ல. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் அடையாளம். நினைவுகள், சடங்குகள் என அவர்களின் உணர்வுடன் பின்னிப் பிணைந்த அடையாளம்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மீன் உற்பத்தியாளராகவும், மீன் வளர்ப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால், தனிநபர் மீன் நுகர்வில் உலகளவில் 129-வது இடத்தில் இருக்கிறது.
அதேநேரம், ICAR மற்றும் WorldFish இணைந்து 2024-ல் நடத்திய ஓர் ஆய்வில், மேற்கு வங்கத்தில் சுமார் 65.7% மக்கள் வாரந்தோறும் மீன் உட்கொள்வது கண்டறியப்பட்டது.
வங்க இலக்கியங்களில் மணிக் பந்தோபாத்யாயின் ‘பத்மா நதிர் மாஜி’ முதல் அமிதவ் கோஷின் படைப்புகள் வரை மீன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்பந்து மைதானத்தில்கூட ஈஸ்ட் பெங்கால் ரசிகர்கள் ‘ஹில்சா’ (Hilsa) மீனையும், மோகன் பகான் ரசிகர்கள் ‘இறாலையும்’ தங்கள் அடையாளமாகக் கொண்டாடுகின்றனர்.