கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் 30 ஆண்டுகளுக்குப் பின்பும் இன்றும் பல வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, மாநில வரலாற்றிலேயே மிக மோசமான ஆட்சியாக அமைந்தது என்று திமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து, கனகம்மாசத்திரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என்று டெல்லியில் இருந்து வருபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் சராசரி 65% ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் அது வெறும் 23% ஆக மட்டுமே உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 77% புகார்கள் கூட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் 91% வழக்குகள் பதியப்பட்டு பெண்களுக்கு உரிய நியாயம் கிடைத்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தபோது, குற்றவாளிகளைப் பாதுகாப்பதிலேயே எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டினார். சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்றவர், பின்னர் அவருக்கே துரோகம் செய்தார். இதுதான் அவர் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை. தற்போது தமிழக மக்களுக்கும், மாநிலத்தின் நலனுக்கும் எதிராகத் துரோகம் இழைப்பவர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரமணா மீது சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது. குட்கா விற்பனைக்கு உதவியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால் அவர் ‘குட்கா ரமணா’ என்றே அழைக்கப்படுகிறார். இத்தகைய குற்றப்பின்னணி கொண்ட ஒருவர்தான் திமுகவிற்கு எதிராகக் களம் இறக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் இல்லாததால் பொதுமக்கள் 10 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. டெல்லி மேலிடத்திற்குப் பயந்து ரமணாவும், எடப்பாடி பழனிசாமியும் இது குறித்துப் பேச மறுக்கின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய போராட்டங்களை நடத்தி மேம்பாலங்கள் அமைத்துத் தரப்படும் என்று உறுதியளித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் 30 ஆண்டுகளுக்குப் பின்பும் இன்றும் பல வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதிமுக ஆட்சியில் செல்போன் வழங்குவதாகக் கூறி ஏமாற்றினர். திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது சொன்னதைச் செய்து காட்டும் அறிக்கை; அதிமுகவின் அறிக்கை வெற்று அறிக்கை என்றும் தெரிவித்தார். பிரிட்ஜ் வாஷிங் மெஷின்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
திமுக மீண்டும் ஆட்சியமைத்ததும், வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளின் நலனுக்காகத் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே குழந்தைகள் காப்பகங்கள் நிறுவப்படும் என்றும் மீண்டும் மினி பஸ் (Mini Bus) சேவை கொண்டு வரப்படும் என்றும் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்த 10,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும் கனிமொழி தனது பரப்புரையில் தெரிவித்தார்.
ஏப்ரல் 07, 2026 11:15 PM IST