கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி, மூத்த அமைச்சர் கே.என். நேரு மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து முக்கிய வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ல் தொடங்கி ஏப்ரல் 5-ல் நிறைவடைந்தது. இந்நிலையில் 7 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோரின் வேட்பு மனுக்களின் பரிசீலனை காலை 11 மணிக்குத் தொடங்கியது. சில தொகுதிகளில் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாலும், அடிதடியாலும் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி, மூத்த அமைச்சர் கே.என். நேரு மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் காசியின் மனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது. சசிகலா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பின் சில வேட்பாளர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சில வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. புழல் சிறையில் இருந்தபடி மனுத் தாக்கல் செய்த பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ஹரியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அத்தொகுதியில் ராக்கெட் ராஜாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பு மனு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் நிராகரிக்கப்பட்டதும், விஜயின் வேட்பு மனு சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் எந்த சிக்கலுமின்றி திருச்சி கிழக்குத் தொகுதியில் அவரது மனு ஏற்கப்பட்டது. ஆனால் பெரம்பூரில் பாமக வேட்பாளர் திலகபாமா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விஜயின் பெயரில் சொத்து வரி கட்டவில்லை என காரணம் கூறப்பட்டது. அதனால் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தவெகவினர் விளக்கம் அளித்த பின் மனு ஏற்கப்பட்டது. இதுபோல் வில்லிவாக்கத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, அவரது மனுவில் மனைவியின் பெயரில் உள்ள நிறுவனங்களின் பெயர்களை முழுவதுமாக குறிப்பிடவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் விளக்கம் அளித்த நிலையில், அதுவும் ஏற்கப்பட்டது.
எனினும், ஈபிஎஸ் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமார் காணாமல் போன நிலையில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாற்று வேட்பாளரான அவரது மனைவி நித்யாவின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுபோல் சிதம்பரத்தில் பிரதான வேட்பாளர் பாரி மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மாற்று வேட்பாளரான அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் பிரமாணப் பத்திரத்தில் தவறு இருப்பதாகக் கூறியவர் தாக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த 2021ல் போட்டியிட்ட கே.சி. வீரமணியின் பிரமாணப் பத்திரத்தில் பிழை இருப்பதாக நீதிமன்றத்தில் ராமமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், ஜோலார்பேட்டை தொகுதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீரமணியின் பிரமாணப் பத்திரத்தில் பிழை இருப்பதாக ராமமூர்த்தியும், ஜெயபிரகாஷும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கோபமுற்ற வீரமணியின் ஆதரவாளர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். காவல்துறையினர் தடுக்க முயன்றும் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பார்வையாளர் யாஷா முக்தால் தெரிவித்தார். தாக்குதலில் காயமுற்ற ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை மீட்டு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு