கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
“தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், அரசியல் பற்றிய முழுமையான புரிதல் விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை. விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், பாஜக வேட்பாளர்கள் பட்டியல் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜகவின் வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு தொகுதி பங்கீடு செய்ததைத் தொடர்ந்து மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் தமிழிசையும் இருந்தார். அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழிசைதான் வேட்பாளாரா எனும் கேள்வி எழுந்த நிலையில், அதனை பாஜக தலைமை அறிவிக்கும் என தமிழிசை பதில் கொடுத்தார்.
இதேபோல் கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை, தான் சாத்தூரில் போட்டியிடுவதாக அறிவித்தார். வானதி சீனிவாசன் தொகுதி மாறுவது, அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்குமா என பாஜக வேட்பாளர்கள் பட்டியல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இன்று சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வேட்பாளர்கள் பட்டியல் இரண்டு தினங்களில் முடிவாகி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் மக்கள், கலாச்சாரம், அரசியல் பற்றிய முழுமையான புரிதல் விஜய்க்கு இருப்பதாக தெரியவில்லை. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மக்களுக்காக பல ஆண்டுகள் உழைத்து, அரசியல் அனுபவம் பெற்று முதலமைச்சரானார்கள். விஜய் தனது கனவு உலகில் இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். ஆனால், அது வாக்குகளாக மாறாது. விஜயகாந்த், கமல் போன்றுதான் விஜய்யும். அவர் மூன்று முதல் நான்கு தொகுதிகளுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.