ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தமிழ் செய்திகள்: ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் களமாடி வருகின்றன.
இந்த தொடரில் முஹம்மது உமர் பூட்டா தலைமையிலான பாகிஸ்தான் அணி பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்ட அந்த அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது. தொடர்ந்து தென்கொரியா அணிக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதேபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தான் – ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டமும் 3 -3 என்கிற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
பாக்,. ஹாக்கி அணியில் இந்திய பிசியோ
இந்நிலையில், ‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோதெரபிஸ்ட் ஆனா தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்கமல் தற்போது பாகிஸ்தான் அணியில் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தான் அணியின் பிசியோவுக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அவரால் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை. இதேபோல், அவரது உதவியாளரும் சொந்த காரணங்களால் வர இயலவில்லை. அவர்களது இடத்தை நிரப்ப பாகிஸ்தான் அணி தீவிரமாக ஒரு பிசியோவை தேடிய நிலையில் தான், இந்த ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹாக்கி அணியில் பிசியோவாக பணியாற்றி வரும் ராஜ்கமலை சேவையைப் பெற்றனர்.
சென்னையைச் சேர்ந்த ராஜ்கமல் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஸ்போர்ட்ஸ் பிசியோவாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் அணியான நெல்லை ராயல் கிங்ஸ் அணியிலும் ராஜகமல் கடந்த மூன்று சீசன்களில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது அவர் சர்வதேச ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியில் பணியாற்றி வருகிறார்.
இதுதொடர்பாக ராஜ்கமல் பேசுகையில், “அவர்கள் (பாகிஸ்தான் அணி நிர்வாகம்) முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்புதான் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களுடன் தகவல் தொடர்பு பிரச்சினை இல்லை. நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுகிறேன், நாங்கள் ஒருவருக்கொருவர் மொழிபெயர்த்து தொடர்பு கொள்கிறோம். அவர்கள் அனைவரும் எனக்கு இங்கு வரவேற்பு அளிக்கின்றனர். மிகவும் வசதியான சூழல் உள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போது, நான் எப்போதும் இந்தியனாக இருப்பேன். ஆனால் போட்டியின் நாளில், எந்த காயமும் இல்லாமல் ஆட்டத்தில் விளையாடும் வீரர்களைப் பற்றி மட்டுமே நான் நினைக்கிறேன். இது சகிப்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு. நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டும். இது வலிமையைப் பற்றியது அல்ல. சகிப்புத்தன்மையைப் பற்றியது.
ஒரு பிசியோவாக, நீங்கள் குழப்பமான காயங்களுக்கு தயாராக இருக்க வேண்டும், மோதல்கள் மூலம் எலும்பு முறிவுகள் மற்றும் இடப்பெயர்வுகள் கூட சாத்தியமாகும். இது கிரிக்கெட் போன்ற விளையாட்டில் இல்லை.” என்று அவர் கூறினார்.
பாக்,. கோச் புகழாரம்
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷானாஸ் ஷேக் இல்லாத நிலையில், முஹம்மது சக்லைன் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பயிற்சியாளர் முஹம்மது சக்லைன் வெகுவாக ராஜகமலைப் பாராட்டியுள்ளார். “அவர் தனது வேலையில் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலகத் தரம் வாய்ந்தவர்.
அவர் எங்களது அணிக்கு தெய்வமாக வந்தார். மிகக் குறுகிய காலத்தில் அவரைக் கண்டுபிடித்தில் நாங்கள் தான் பாக்கியசாலிகள்.” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil