பெற்ற மகளுக்கு குறித்த நேரத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற வேதனைதான் ஒரு தந்தைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய மன உளைச்சல். அப்படி ஒரு திருமணத்தை தனது மகளுக்கு செய்து வைக்க முடியாமல் போய்விடும்போது, தனது உயிரையே மாய்த்துக்கொண்டுவிடும் நிலைக்கு சென்றுவிடுகிறார் ஒரு தந்தை…
செலவு மிக்க சடங்காக மாறிவிட்ட திருமண நிகழ்வு ஒரு உயிரையே பறித்துவிட்ட சம்பவம்தான் சென்னையில் அரங்கேறி இருக்கிறது. மகளை நினைத்து தந்தையும், தந்தையை நினைத்து மகளும் உயிரை துறந்த சம்பவத்தின் சோகப் பின்னணி என்ன?
சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் பகுதியில் வசித்து வந்தவர் 57 வயதான கிருஷ்ணகுமார். ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்கியா தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இளைய மகள் பாக்கியாவுக்கு 30 வயதாகியும் இதுவரை திருமணம் ஆகாததால், தந்தை கிருஷ்ணகுமார் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் மனைவியும், மகளும் அவரை தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் தாயும், மகளும் சோர்வாக வீட்டிற்கு வந்தனர்.
மார்ச் 8 ஆம் தேதி இரவு கிருஷ்ணகுமாரின் மனைவி வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தபோது, அங்குள்ள பாழடைந்த கிணற்றின் மீது கிருஷ்ணகுமாரின் செல்போன் இருப்பதை கண்டு தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உடனே, மகள் பாக்கியா ஓடிவந்து பார்த்தபோது கிணற்றில் தந்தை உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
உடனே அம்மாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு, சமையலறைக்குச் சென்று சற்று நேரத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறைக்குள் இருந்த தாய், மகள் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து கதறி அழுதிருக்கிறார்.
பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து வடபழனி போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு இரு தரப்பினரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டனர். வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், இருவர் இறப்பிற்கும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.