நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள டெக்ஸா திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த திரைப்பட பூஜையில் கலந்து கொண்ட பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் பேசியதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு சட்டத்தை இயற்றும்போது, ஒரு தனி நபரான ஆளுநருக்கு அந்தச் சட்டத்தை முடக்கும் அதிகாரம் வழங்கப்படுவது சரியல்ல. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்றார்.
மேலும் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தற்போது மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது அங்குள்ள அரசியல் சூழலில் அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாகத்தான் பார்க்கப்படுகிறது என்றார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலங்கள் மெல்ல மெல்ல தமிழக நிலங்களை ஆக்கிரமித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மரங்களில் குறியீடுகள் இடுவது, வனப்பகுதிகளை விரிவாக்கம் செய்வது என தமிழக எல்லைகள் சுருங்கி வருகின்றன. நமது வளங்களைக் கொள்ளையடித்துவிட்டு, தமிழகத்தை குப்பை மேடாக மாற்றும் செயல்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
“எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மாற்றமில்லை” என்றும், மேலும் தன்னோடு யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்றார். வாக்குக்கு காசு கொடுக்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் வந்தால் மட்டுமே கூட்டணி பற்றிச் சிந்திக்க முடியும். காசு கொடுத்துப் பெறும் வெற்றி என்பது இழிவான அரசியல்” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தவெகவினர் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒரு தவறை ஏற்றுக் கொண்டு உணர்ந்து கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு ஒரு மிகப்பெரிய மனப்பக்குவம் வேண்டும் என்றும் அது ஒரு பெரிய மனித மாண்பு என்றார். கரூரில் நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்று அவர் கூறுகிறார். அவர் அங்கு வரவில்லை என்றால் கூட்டம் கூடி இருக்காது; கூட்டம் கூடவில்லை என்றால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்திருக்காது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டது அதை உணர்ந்து மக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறுகிறார். கரூரில் மட்டுமல்ல அவர் கலந்து கொண்ட முதல் மாநாட்டிலேயே மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று கூறிய அவர், போதைப் பழக்கம் மற்றும் மதுவின் தாக்கம் காரணமாகக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொலையாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாகக் கிடைக்காதது குற்றவாளிகளுக்குத் துணிச்சலைத் தருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அரசால் மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் நல்ல ஆட்சியை கொடுத்து விட்டால் கூட்டணி தேவையில்லை என்றார் மேலும் தொடர்ந்து அரசு விளம்பரங்களின் மீது அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும் ஒரு திட்டம் மக்களிடையே சென்றடைந்துவிட்டால், அதற்கு விளம்பரம் செய்ய தேவையில்லை என்று அவர் கூறினார். மேலும் மாநில உரிமை பேசும் திமுக மாநில உரிமையை பறித்த காங்கிரசுடன் கூட்டணி வைத்து வருவதாகவும், மாநில உரிமைகளை பறித்த காங்கிரஸும் இழந்த திமுகவும் தற்போது கூட்டணி வைத்து வருவதாக அவர் விமர்சித்தார்.
”இன்றைய இளைஞர்கள் மத்தியில் அரசியல் அறிவை விடத் திரைப்பட மோகம் அதிகமாக இருப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம்” என்று குறிப்பிட்ட அவர், “கல்வி நிறுவனங்களில் அரசியல் பேசத் தடை விதித்துவிட்டு, சினிமா நட்சத்திரங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஒரு சமூகச் சீர்கேடு. இது மாற வேண்டும் எனவும் மெல்ல மெல்ல இந்த சூழல் மறையும்” என்று அவர் கூறினார்.
#ஜஸ்டின் தெரியாமல் நடந்து விட்டது அதற்கு நானும் பொறுப்பாகி விட்டேன் என்று மக்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் முடிந்திருக்கும் – விஜய் குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி #சீமான் #NTK #விஜய் #கரூர் #டிவிகே #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/nDyUiy2j99
— நியூஸ்18 தமிழ்நாடு (@News18TamilNadu) மார்ச் 6, 2026
மேலும் தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதமாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், கேரளாவிலும் திரைப்படங்கள் ஓடுவதாகவும் ஆனால் தமிழ்நாட்டில் நடிகர்களை இறைவனுக்கு இணையாக பார்க்கப்படுவதாக அவர் விமர்சித்தார். “ஆந்திராவில் என்.டி. ராமாராவும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரும் பதவிக்கு வந்தது ஒரு தற்செயல் என்றும் ஆனால் தமிழ்நாட்டைப் போல திரை கவர்ச்சியில் அளவு கடந்த ஆர்வம் கொண்ட மாநிலம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது என்றார்.