கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான பாண்டி, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொழிலாளி உயிரிழப்பின் மர்மம் விலகுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி 49 வயதான பாண்டி. இவர் இரு தினங்களுக்கு முன்பு பாதரக்குடியில் உள்ள டாஸ்மாக்கிற்கு மது வாங்க சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, பாதரக்குடி அருகேயுள்ள கண்மாயில் பின் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ந்து போயினர்.
உடனடியாக அது குறித்து குன்றக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பாண்டியை யாரோ கொலை செய்துவிட்டதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்காமல் போலீசார் தாமதப்படுத்துவதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உயிரிழந்த பாண்டியின் சகோதரர் முத்துராமன் கூறும்போது, தனது சகோதரர் பாண்டி இறந்து கிடந்த இடத்தில் அவரது செல்போனை காணவில்லை எனவும், அந்த போனுக்கு தான் தொடர்பு கொண்டபோது, அழைப்பை ஏற்ற ஒருவர், செல்போனை பாண்டி 500 ரூபாய்க்கு அடகு வைத்திருப்பதாகக் கூறியதாகவும், தான் பணத்தை தருவதாகக் கூறியதும், கோவலூருக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அந்த நபர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த நபரைப் பிடிப்பதற்காக காவலர் ஒருவருடன் உயிரிழந்த பாண்டியின் சகோதரர் முத்துராமன் சென்று காத்திருந்த நிலையில் அவர் வரவில்லை. மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டபோது, அமராவதிபுதூரில் இருப்பதாக கூறியிருக்கிறார். இரவாகிவிட்டதால், அங்கு செல்ல வேண்டாம். காலைக்குள் அந்த நபரைப் பிடித்து விடுகிறோம் என்று போலீசார் கூறியிருக்கின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முத்துராமன் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுடன் மது அருந்தச் சென்ற பாண்டி, கீழே தடுமாறி விழுந்ததில் பின் தலையில் அடிபட்டு இறந்ததுபோல் தெரிகிறது எனக் குறிப்பிட்ட போலீசார் உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரே போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலையா? என்பது தெரியவரும்’ என்று தெரிவித்துள்ளனர்.