கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
எங்களின் செயல்பாடுகள் மூலமாகவே பதிலடி கொடுப்பதுதான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பாணி.
பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி இன்று தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவை அளித்த அவர், பின்னர் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஐந்தாண்டு காலத்தில் தனது தொகுதியில் முன்னெடுத்த வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார். 2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, நீண்ட கால கோரிக்கையான பூந்தமல்லி பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேரை மீண்டும் இயங்கச் செய்துள்ளதாகவும், வருங்காலங்களில் பூந்தமல்லி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு வேளாண் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புட்லூர் ஏரி மற்றும் தண்ணீர்குளம் ஏரி ஆகியவற்றில் உள்ள மாசுபாட்டை நீக்கச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, புட்லூர் ஏரியைச் சீரமைக்க 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ” எங்களின் செயல்பாடுகள் மூலமாகவே பதிலடி கொடுப்பதுதான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பாணி. திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் முன்வைத்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
மேலும், பூந்தமல்லி தொகுதி சென்னைக்குச் செல்லும் பிற மாநில மற்றும் மாவட்ட மக்களின் நுழைவாயிலாகத் திகழ்வதால், அதன் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒருமித்த ஒத்துழைப்புடன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர்: பார்த்தசாரதி
திருவள்ளூர் (திருவள்ளூர்), திருவள்ளூர், தமிழ்நாடு
ஏப்ரல் 05, 2026 10:19 PM IST