கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் தான் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகளும், நாதக மற்றும் தவெக ஆகியவை தனியாகவும் களம் காண்கின்றன.
தமிழ்நாட்டில் இன்று (30 ஆம் தேதி) முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்றே திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தாக்கல் செய்தார். இதேபோல், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு மொத்தம் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பழனி, கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், திருவொற்றியூர் மற்றும் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், பழனி – என் பாண்டி, கந்தர்வக்கோட்டை – எம். சின்னதுரை, பத்மநாபபுரம் – ஆர். செல்லசுவாமி, திருவொற்றியூர் – எல். சுந்தரராஜன், கீழ்வேளூர் – டி. லதா ஆகியோரை வேட்பாளர்களாக என சிபிஎம் அறிவித்துள்ளது.