கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தமிழ்நாட்டில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 42.62 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்திருப்பதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 27 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் கிராமத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 53 ஐம்பொன் சிலைகள், பித்தளை சிலைகள், சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அகே உரிய ஆவணங்கள் இன்றி ஆம்னி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 37 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில், இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், 16 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள், 3 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், 2 கோடியே 37 லட்சம் மதிப்பிலான பணம், 18 லட்சம் மதிப்பிலான மதுபானம் என மொத்தம் 42 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்களைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.