கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஜனநாயகன் படக் காட்சிகள் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் தென்னிந்திய தொகுப்பாளர் சங்கம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இறுதியில் தேர்தல் ஆணைய அனுமதிக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு வாக்குப் பதிவுக்கு சில தினங்கள் முன் அப்படத்தின் காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகின. பின்னர் முழு படமும் வெளியானதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக படக்குழு சைபர் க்ரைமில் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், உதவி படத் தொகுப்பாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைப்பதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் உமாசங்கர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ், தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது.
மேலும் “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் E ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படத் துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.
திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் படத்தொகுப்பாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் ‘இடை நீக்கம்” செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது. இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் பிரதீப் E. ராகவுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.