கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பில் 4900 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. விஜய், “அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும்” என உரையாற்றினார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் அடுத்த ஜென்மத்தில் நான் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று பேசிய விஜய் நான் டெல்டாகாரன் என உங்கள் காதில் டால்டா ஊற்ற மாட்டேன் என தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் 4900 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முழுக்க, முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து தஞ்சாவூரில் கூட்டம் நடைபெற உள்ள செங்கிபட்டிக்கு சாலை வழியாக தனது பிரச்சார வாகனத்தில் விஜய் பயணித்தார். திருச்சியில் இருந்து செங்கிப்பட்டி வந்த விஜய்க்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து செங்கிப்பட்டி கூட்ட நிகழ்ச்சி வருகை தந்த விஜய் தவெக நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நான் போன மீட்டிங்கில் வேலூரில் பேசும் போது சொல்லி இருந்தேன், தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என சொல்லியிருந்தேன். உடனே விஜய் வந்து பாஜகவிற்காக பேசுகிறார் என கூறுகின்றனர். இனி ஏமாற்று வேலையை அவர்கள் செய்ய முடியாது.
தமிழ்நாட்டை பிழைக்க வைக்கிறது ஸ்டாலின்தான் என கூறுகிறார்கள் அதெல்லாம் இனி ஒர்க் அவுட் ஆகாது. கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியில் டெல்லி அணி தொட்டுக்கூட பார்க்க முடியாது. விசிலை போடுவது தமிழ்நாடு தான், சிஎஸ்கே தான். ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீயசக்தி என சிறுவர்கள் கூட கூறுகின்றனர்.
தேர்தலுக்காக வந்த உறவு இல்லை, இது இயற்கையாக வந்த உறவு. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்சன், ஆனால் எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இது எமோஷனல். ஊழலற்ற உண்மையான சமூக நீதி ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதிமொழியை தருவீர்களா? இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா என்றும் கேட்டு கொண்டார்.
மேலும் அடுத்த ஜென்மம் இருந்தால் நான் விவசாய குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும். எனக்கு விவசாயம் பற்றி தெரியாது தான். ஆனால் நான் டெல்டாகாரன் என காதில் டால்டா ஊற்ற மாட்டேன் என்றார்.
தஞ்சாவூர், தமிழ்நாடு
மார்ச் 04, 2026 11:47 AM IST