நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவலாக பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே ஓப்பனாக பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலக இருப்பதாக செய்தி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறப் போகிறார், நடிப்பை முற்றிலும் நிறுத்தப் போகிறார் என்ற பல்வேறு தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று மேலாக வெளியாகியதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் கவலையும் ஏற்பட்டது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நையாண்டி கலந்த பதிலை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் “என் கதை முடிந்து விட்டதா? நான் சினிமாவை விட்டுவிட்டேன், ஒரு பணக்காரரை திருமணம் செய்து கொண்டேன், நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டேன்… அவங்களுக்கு நேத்து தான் ரெண்டு வயசு ஆச்சு. இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் கற்பனையே என்பதைக் குறிப்பிடும் விதமாக அந்த பதிவை போட்டுள்ளார் திரிஷா. திரிஷாவின் இந்த பதில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
“ஒரே பதிவில் எல்லா வதந்திகளுக்கும் சரியான பதில் கொடுத்துவிட்டார்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், அடிக்கடி இப்படியான பொய்யான தகவல்கள் பரவுவது குறித்து ரசிகர்கள் சிலர் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாக திரிஷா தொடர்பான தனிப்பட்ட விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவரது திருமணம், உறவுகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை குறித்து தொடர்ந்து வதந்திகள் கிளம்பி வருகின்றன. மேலும், விஜய் உடன் அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையும் சிலர் தேவையற்ற விவாதமாக மாற்றி இருந்தனர்.
இதுவரை இத்தகைய சர்ச்சைகளுக்கு பெரிதாக பதில் அளிக்காத திரிஷா, இந்த முறை வதந்திகள் அளவுக்கு மீறியதால் நேரடியாக களமிறங்கி விளக்கம் அளித்துள்ளார். தனது பணியில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், ஒரு பதிவின் மூலம் எல்லா வதந்திகளுக்கும் தெளிவான பதிலை வழங்கியுள்ளார். இதனால் தான் சினிமாவை விட்டு விலகும் முடிவில் இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவர் கைவசம் தற்போது கருப்பு திரைப்படம் உள்ளது. அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. கருப்பு திரைப்படம் வருகிற மே மாதம் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது.
கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து அவர் கைவசம் உள்ள படங்கள் என எடுத்துப் பார்த்தால், அது மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் ராம் தான். அந்த படமும் பல ஆண்டுகளாக எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அண்மையில் அவர் எந்த புதுப் படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்ததே அவரைப் பற்றிய வதந்தி பரவ முக்கிய காரணமாக இருந்தது. விரைவில் திரிஷா தான் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.