கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஒரு தனிமனிதனின் உறுதியான முயற்சி, ஒரு நதியையும் அதன் மணல் வளத்தையும் எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதற்கு நாறும் பூ வாழும் சான்று.
இயற்கையை நேசிப்பவர்களும், சமூக ஆர்வலர்களும் நினைத்தால் ஒரு கிராமத்தின் முகவரியையே மாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தை சேர்ந்த நாறும்பூ. ஆற்று மணலை பாதுகாக்கவும், தன் கிராமத்தை பசுமையாக்கவும் அவர் மேற்கொண்ட 20 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக, இன்று அந்த பகுதி அடர்ந்த வனமாக மாறியுள்ளது.
திருப்படைமருதூர் கிராமத்தை சுற்றி ஆறு ஓடுகிறது. தாமிரபரணி ஆற்று பகுதியாக விளங்கும் இந்த இடத்தில் அதிகளவில் மணல் வளம் இருந்தது. ஆனால், அந்த மணல் கொள்ளையடிக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் கிராமத்தின் இயற்கை சமநிலையையும் நீர்வளத்தையும் பாதிக்க தொடங்கியது. இதை தடுக்க வேண்டிய அவசியம் உருவானது.
அந்த நேரத்தில் மறைந்த நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கினார். “இந்த மணலை பாதுகாக்கவும், ஆற்றையும் ஊரையும் காப்பாற்றவும் மரங்களை நட்டு ஒரு வனத்தை உருவாக்கினால் மட்டுமே முடியும்” என்ற அவரது கருத்தை நாறும்பூ தனது வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டார். இயற்கையை காப்பதே உண்மையான தீர்வு என்பதை அவர் நம்பினார். அதன்படி அவர் நட்ட ஒவ்வொரு மரமும் இன்று பசுமையாக வளர்ந்தது.
இது குறித்து நாறும்பூ கூறுகையில், ” “1996-ஆம் ஆண்டு தான் நான் மரம் நடும் பணியை ஆரம்பித்தேன். 2004-ஆம் ஆண்டு வரைக்கும் சுமார் 10,000 மரங்களை நட்டேன். இன்று அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி பல்லாயிரங்களைத் தாண்டி ஒரு காடாகவே வளர்ந்து நிற்கிறது. இங்கு நாவல், மருது, கொடுக்காப்புளி, புங்கை, வேம்பு, குமிழ், சிசு, தான்றி போன்ற பல வகையான மரங்களை வளர்த்திருக்கிறோம். இந்த மரங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் பாதுகாப்பான ஒரு வாழ்விடமாக மாறியிருக்கிறது.
ஆற்று மணலில் மரம் வளர்ப்பது சாதாரண மண்ணை விட மிகவும் கடினமானது. ஆனாலும் அதை எப்படி வளர்க்கலாம் என்று யோசித்து ஒரு முறையை பின்பற்றினோம். எந்த இயந்திரங்களும் பயன்படுத்தவில்லை. மண்வெட்டியும் பயன்படுத்தவில்லை. பெண் தொழிலாளர்களை வைத்து கைகளாலேயே ஒன்றரை அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டினோம். மணலில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்கும். அதனால் ஒருமுறை ஊற்றிய தண்ணீரே செடிகள் வளர மிகவும் உதவியது. இயற்கையின் தன்மையைப் புரிந்து கொண்டு வேலை செய்ததால் இந்த முயற்சி வெற்றி பெற்றது.
ஆரம்பத்தில் இந்தப் பணிக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. மரம் வளர்த்தால் நிலம் பாதிக்கப்படும் என்று சிலர் பயந்தார்கள். சிலர் மரங்களுக்கு தீ வைத்தார்கள். சிலர் மாடுகளை மேயவிட்டு செடிகளை அழித்தார்கள். ‘இங்கே எந்தக் காலத்திலும் மரம் வளரக் கூடாது’ என்று நினைத்தவர்களும் இருந்தார்கள். ஆனால் நான் விடாமல் தொடர்ந்து இந்த முயற்சியை செய்தேன். இன்று அதே இடம் ஒரு பசுமையான சோலையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் எதிர்த்தவர்கள் இன்று அந்த மரங்களின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த முயற்சியை பாராட்டி சில அங்கீகாரங்களும் கிடைத்தன. திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் எனக்கு ‘காந்தாரி விருது’ வழங்கப்பட்டது. மேலும் வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் (DFO) சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்கள். ஆனால் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது என்னவென்றால், மணல் கொள்ளையிலிருந்து காப்பாற்றப்பட்ட அந்த ஆறும், பசுமையடைந்த என் கிராமமும் தான்.
மரம் இருந்தால்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும். மரம் இல்லையென்றால் உலகமே அழிவை நோக்கிச் செல்லும். அதனால் இளைஞர்களும் விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் மரம் வளர்க்க முன்வர வேண்டும். யாராவது இப்படிப்பட்ட காடுகளை உருவாக்க விரும்பினால், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் நான் செய்யத் தயார்” என தெரிவித்தார்.
திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு