கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மிகுந்த விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டுமென அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கண் துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை கண்கூடாகக் கண்டோம் எனக் குறிப்பிட்டுள்ள ஈபிஎஸ், விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், எப்படியாவது புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு தயாராக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் முகவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வெற்றிக்கனியை சிந்தாமல், சிதறாமல் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று எக்காரணம் கொண்டும் முகவர்கள் கால தாமதமாக செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ள ஈபிஎஸ், வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் மாறுதல்கள் இருக்கும் பட்சத்தில், அதற்கான தீர்வு கிடைத்த பின்னர்தான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.