கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தாக்குதலுக்கு பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டது. சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் புனேயில் கைது செய்தனர்.
மும்பையில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி சிக்கியது எப்படி?
மும்பை ஜூகு பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீடு அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 31-ம் தேதி இரவு அவரது வீட்டின் மீது மர்மநபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் குண்டு அவரது வீட்டு முதல் மாடி சுவர், பால்கனி கண்ணாடியை துளைத்தது.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டது. சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் புனேயில் கைது செய்தனர். எனினும் முக்கிய குற்றவாளி தலைமறைவானார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் சாதுவாலி சோதனைச் சாவடியில் ஒரு மோதல் சம்பவம் அரங்கேறியது.
சம்பவத்தின் போது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் பஞ்சாபிலிருந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில், ராஜஸ்தானின் சாதுவாலி சோதனைச் சாவடி வழியாக வந்துகொண்டிருந்தார். வாகனத்தில் பதிவெண் இல்லை என்பதை அறிந்ததும் போலீசார் மடக்கியுள்ளனர்.
அப்போது திடீரென துப்பாக்கியை எடுத்து ஆகாஷ் காவல்துறையினர் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ந்து போன போலீசார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் ஆகாஷின் காலில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையில் திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய நபர் எனத் தெரியவந்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் தீவிர உறுப்பினர் எனக் கூறப்படும் 32 வயதான ஆகாஷ் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரன்ஸ் கும்பலின் முக்கிய கூட்டாளியான ரவுடி அர்ஸூ பிஷ்னோயின் வழிகாட்டுதலின் கீழ் ஆகாஷ் செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் அர்ஸூ பிஷ்னோய் சமூக ஊடகங்கள் வழியாக கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.
ரோஹித் ஷெட்டியின் மும்பை இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான ஒப்பந்தத்தை ஆகாஷ், அவரது கூட்டாளியான ஷிவா குர்ஜாருடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பணியை அர்ஸூ பிஷ்னோய் வழங்கியதாகவும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இணையதளங்கள் மூலமாக தகவல்களை பறிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆகாஷ் ஒரு தொழில்முறை துப்பாக்கிச் சுடும் வீரர் என்றும், முக்கியமாக இடங்களை வேவு பார்ப்பதிலும், இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதிலும் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவர் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வசித்து வந்தார். அவர் மீது உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹனுமன்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆகாஷின் கூட்டாளியான சிவா குர்ஜார், மார்ச் 23 அன்று பிடியாணையின் பேரில் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களுக்கு சிறையில் உள்ள ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் இலக்குகளை வழங்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு