கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
கோவையில் எங்கெல்லாம் கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார்கள்? என்பதை நோட்டமிட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்ற வழிப்பறி கும்பலின் தலைவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு அலறவிட்டு வந்தவருக்கு, எண்டுகார்டு போடப்பட்டதன் பின்னணி என்ன?
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஏராளமான தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களின் கல்லூரி விடுதி கட்டணம் கூடுதல் என்பதால், அதில் பலர் வெளியே வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்படி தங்கியுள்ள மாணவர்களின் அறைகளை குறிவைத்து, பூட்டை உடைத்து லேப்டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களைத் திருடுவது, தனியாக சிக்கும் மாணவர்களை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவது என கோவையை குற்ற குடோனாக சிலர் மாற்றி வருகின்றனர். அதில் முக்கிய குற்றவாளி பாலமுருகன்.
இவர் மாஸ்டர் பட பவானியை போல கொடூர கூட்டாளிகளை வைத்து கல்லூரி மாணவர்களை அச்சுறுத்தி வந்துள்ளார். பாலமுருகனால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் போலீசில் அடுத்தடுத்து புகார் அளிக்க, இனியும் அவரை விட்டுவைத்தால், கோவை குற்ற கூடாரமாக மாறிவிடும் என களத்தில் இறங்கினர்.
சூலூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் பிடிக்கச் சென்றபோது, அவர் அரிவாளால் காவல் உதவி ஆய்வாளர் யுவராஜை வெட்டி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனால், தற்காப்பிற்காக ஆய்வாளர் பிரேம் ஆனந்த், பாலமுருகனை துப்பாக்கியால் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். குண்டு பாய்ந்து வலியால் அலறிய பாலமுருகனை மீட்டு, சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.