கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் ஸ்டாலின் பணிய மாட்டார் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினிக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது டெல்லி என்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுவார் என்ற டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், டெல்லி சென்றாலே தமிழக முதல்வர் பயப்படுவார் என்று கூறுவது முற்றிலும் தவறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். தமிழ்நாடு என்றைக்கும் தலை குனியாது,” என்றார்.
மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அரசு அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், “தமிழக அரசு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்பதை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
அதேபோல் ஆதவ் முன்வைத்த “பண்ணையார் ஆட்சி” குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஆதவ் அர்ஜுனா என்ன தொழில் செய்கிறார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். யார் பண்ணையார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்,” என்று பதிலடி கொடுத்தார்.
இதற்கிடையில், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் மௌனமாக அங்கிருந்து சென்றார்.
”அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் ஸ்டாலின் பணிய மாட்டார்” டிடிவி தினகரன் விமர்சனத்திற்கு ஓபிஎஸ் பதில்