கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் கிராமத்தில் மின் வேலியில் சிக்கி வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் வைத்த மின் வேலியில் சிக்கி வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வயல் வெளியில் கொக்கி மூலம், மின்சாரம் வைத்த மர்ம நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அரங்கேறிய கொலையா? நடந்தது என்ன?
காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதிகள் கன்னியப்பன் – ராணி. இவர்களுக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வழக்கம்போல வயலுக்கு சென்ற தம்பதி, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் தம்பதியைத் தேடிச் சென்ற அவர்களது மகன், வயலில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பெற்றோரைக் கண்டு துடிதுடித்துப் போனார்.
ஊர்க்காரர்களுக்குத் தகவல் கொடுத்து கூட்டம் கூட, வயலின் மேலே செல்லும் மின்சார லைனில் ஒயர் மூலம் யாரோ கொக்கி போட்டு, அதில் மின்சாரம் பாய்ந்து தம்பதி இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதற்குள் தகவலறிந்துவந்த பாலுசெட்டி போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்து, விசாரணையைத் தொடங்கினர்.
பம்ப் செட்டுக்கு வரும் மும்முனை இணைப்பு மின்சார ஒயரில் யாரோ கொக்கி போட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் பாய்ந்த மின்சாரம்தான் தம்பதியை காவு வாங்கி உள்ளது. இதனால் இச்சம்பவம் கொலையாகக் கூட இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மின்வேலியில் கொக்கி போட்டது யார் எனவும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தம்பதியின் பக்கத்து நிலத்துக்காரர்களிடம் விசாரித்து வருகின்றனர்.