தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆறாயிரத்து 445 கன அடியிலிருந்து 17 ஆயிரத்து 596 கன அடியாக அதிகரித்துள்ளது. பாசன தேவைக்காக திறக்கப்பட்ட நீரானது வினாடிக்கு பத்தாயிரம் கன அடியிலிருந்து ஏழாயிரம் கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஐந்தாயிரத்து 269 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையிலிருந்து ஆயிரத்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101 எம்.எல்.டி.அளவிலிருந்து 98எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.