கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.
ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவின் மெக்காவில் சிக்கிக் கொண்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி ரமலான் புனித மாதத்தை ஒட்டி சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டதால் மீண்டும் தமிழ்நாடு திரும்ப முடியாமல் சவுதி அரேபியாவில் அரசின் தலைமை காஜி சிக்கியுள்ளார்.
தன்னை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்துச் செல்ல தலைமை காஜி கோரியிருந்தார். இந்நிலையில், தலைமை காஜி மெக்காவில் பத்திரமாக இருப்பதாகவும், அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைமை காஜி உள்ளிட்டோருடன் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருவதாகவும், விமான சேவைகள் தொடங்கப்பட்டதும் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 02, 2026 10:09 PM IST