கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இறந்தவர்கள் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
நேபாளத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். பொள்ளாச்சி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 பேர், ஆன்மிக பயணமாக, கடந்த 7 ஆம் தேதி நேபாள நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை கந்தகி மாகாணத்தில் உள்ள மனகாமனா கோயிலில் வழிபட்டபின் அங்கிருந்து இரண்டு பேருந்துகளில் காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, சாலை வளைவில் ஒரு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்தப் பேருந்து மலையிலிருந்து சுமார் 400 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்கள் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், அவரது மனைவி மீனா, பாபு, தேவகோட்டையைச் சேர்ந்த அண்ணாமலை, அவரது மனைவி விஜயா, அவரது சகோதரி மீனாட்சி என்பதும் மற்றொருவர் தமிழரசி என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆன்மிக பயணம் சென்ற 7 பேர் உயிரிழந்ததால், அவர்களது சொந்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு