கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Vanathi Srinivasan Health Report | கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ.வும் கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசனுக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்றால், சிகிச்சை பெறுவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ போட்டியிடுகிறார்.
கடந்த 4 நாட்களாக தொகுதிக்குள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதன் காரணமாக அவரது தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
“வானதி சீனிவாசன் நேற்று மதியம் 2:50 மணிக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றிற்கு லேசான அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று இரவு 8 மணிக்கு கண்காணிப்புக்காக ஐசியு (ICU) பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உணர்வுடன் இருந்து, பேசக்கூடிய நிலையில் மிகவும் நலமாக உள்ளார்.
கோயம்புத்தூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு