2021ல் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 1,000 இருக்கைகள் உள்ளன. சராசரியாக ஒரு காட்சிக்கு 737 பேர் வருகின்றனர். அதாவது, வருகை 74%. 2026-ல் அதன் உரிமையாளர் திரையரங்கின் வரவு, செலவு குறித்து கணக்கெடுத்தார். அதில், தேவையற்ற மற்றும் போலியான 109 இருக்கைகளை நீக்குகிறார். இப்போது மொத்த இருக்கைகள் 891 ஆக உள்ளது. அதே ஆண்டில் உச்சபட்ச தமிழ் நடிகரின் படம் அந்த திரையரங்கில் வெளியாகிறது. இந்த முறை 758 பேர் படம் பார்க்க வருகின்றனர். தற்போது, வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 85% ஆக இருக்கும்.
இருக்கைகள் (வாக்காளர் பட்டியல்) முறைப்படுத்தப்பட்டதால் சதவிகிதம் 85% ஆக எகிறியுள்ளது. அதே சமயம், பார்வையாளர்களின் எண்ணிக்கை 737-லிருந்து 758 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, முறைப்படுத்தபட்டதால் வருகை சதவிகிதம் உயர்ந்தது ஒருபுறம் இருந்தாலும், 21 பேர் கூடுதலாகத் தியேட்டருக்கு வந்திருப்பதுதான் மக்களின் உண்மையான எழுச்சியைக் காட்டுகிறது.
இங்கே கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள்: இருக்கைகள் முறைப்படுத்தப்பட்டதால் சதவீதம் அதிகரித்துள்ளது என்பது ஒருபுறம் இருந்தாலும், 737-லிருந்து 758 ஆகப் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மக்களின் உண்மையான ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்த கூடுதல் வருகையை ‘சினிமா மீதான திடீர் ஆர்வம்’ (திடீர் ஜனநாயகப் பற்று) என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. அதே சமயம், ஒரு ‘உச்சபட்ச நடிகரின் படம்’ (விஜய்யின் அரசியல் வருகை) அந்த வருகை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்திருப்பதை நாம் நிராகரிக்கவும் முடியாது.
இதுவே 2026 தேர்தலிலும் பிரதிபலித்துள்ளது.
கடந்த காலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேரும் வேகத்திற்கும், மக்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வேகத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்தது.
உதாரணமாக, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் 23% ஆக அதிகரித்தது. ஆனால், அத்தேர்தலில் பதிவான வாக்குகளோ வெறும் 18% மட்டுமே உயர்ந்தன. 2021 தேர்தலில் வாக்காளர் பட்டியல் 8% உயர்ந்த நிலையில், வாக்குப்பதிவு வளர்ச்சி வெறும் 6.3% ஆகக் இருந்தது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் , வாக்காளர் பட்டியலில் 100 பெயர்கள் புதிதாக இணைந்தால், அதில் 60 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். மீதமுள்ள 40 பேர் வாக்களிக்க முன்வரவில்லை. இதுவே ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவிகிதத்தைக் குறைத்துக் காட்டியது.
| தேர்தல் ஆண்டு | வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டவர்கள் | வாக்கு செலுத்த வந்தவர்கள் |
| 2016 | 23% | 18% |
| 2021 | 8% | 6.3% |
| 2018 | – 9.9% | 5% |
ஆனால், 2026-ல் இந்த நிலை அப்படியே மாறியுள்ளது. முதல்முறையாக, வாக்காளர் பட்டியலின் வளர்ச்சியை விட, மக்களின் பங்கேற்பு (Participation) அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் திருத்தப் பணியால் போலி பெயர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் 9.9% சுருங்கியது. வாக்காளர் பட்டியல் சுருங்கிய நிலையிலும், கடந்த முறையை விட சுமார் 23 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வந்து வாக்களித்துள்ளனர்.
ஒருவேளை, SIR திருத்தம் செய்யப்படாமல் பழைய முறைப்படியே இருந்திருந்தால் கூட, இந்த முறை வாக்குப்பதிவு 76%-ஐத் தாண்டியிருக்கும். இது 2021-ன் 74% விட அதிகம். எனவே, SIR வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியிருந்தாலும், மக்களின் கூடுதல் வருகையே இந்த 85% என்ற வரலாற்று சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது
முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை நிலவிய நான்கு முனைப் போட்டி, வாக்காளர்களிடையே ஒரு தெளிவான உள்நோக்கத்தை (Intent, Motivation, Political Stand) உருவாக்கியுள்ளது. தங்களின் ஒரு வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது இந்த முறை தங்களின் விருப்பத்தை தெரியபடுத்தி விட வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே ஒரு பெரும் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நாளன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ஆதரவு இளைஞர்கள், அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவியத் தொடங்கினர். அவர்கள் தங்களின் தனித்துவமான ஆடைகள் மற்றும் அடையாளங்கள் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொண்டது மற்ற கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதன் காரணமாக, திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளிடையே தங்களின் ஆதரவு வாக்காளர்களைத் தவறாமல் வாக்குச்சாவடிக்கு வரவைப்பதை உறுதிப்படுத்தின. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இருந்தும் வாக்குச்சாவடிக்கு வராத காலங்கள் போய், தற்போது மக்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களித்திருப்பது, ஜனநாயகத்தில் மக்களின் நேரடிப் பங்கேற்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதைக் காட்டுகிறது.