கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
மதுரை விமான நிலையம் முதல் திருப்பரங்குன்றம் கோயில் வரை பிரதமர் பயணிக்கும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, முன்னதாக மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கோயில் வாசலில் இருந்து கருவறை வரை 150 மீட்டருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அலுவலக அறை முன் வைக்கப்பட்டுள்ள சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
பிரதமர் வருகையை யொட்டி பக்தர்களுக்கு எந்தவித தடையும் இல்லை எனவும் வழக்கம்போல் காலை 5 மணி முதல் ஒரு மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை பிரதமர் மோடி வழிபாடு செய்த பின்பு 5 மணி அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி செல்போன் சிக்னலைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை விமான நிலையம் முதல் திருப்பரங்குன்றம் கோயில் வரை பிரதமர் பயணிக்கும் வழிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.