கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
பாமகவின் மாம்பழம் சின்ன வழக்கில், அன்புமணி தரப்பு இது நிழல் வழக்கு என வாதிட, உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ராமதாஸ் – அன்புமணி தரப்புகள் பரபரப்பு வாதம் நடந்தது.
பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சியின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இது ஒரு நிழல் வழக்கு என்று அன்பு மணி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, கட்சி அன்புமணி ராமதாஸ் வசமே உள்ளதாக அவரது தரப்பில் கூறப்பட்டது.
அன்புமணி தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் புதிதாக விசாரிக்க எதுவுமில்லை என்றும் வாதிடப்பட்டது. எனவே, இது ஒரு நிழல் வழக்கு என்றும், ராமதாஸ் பெயரில் யாரோ ஒருவரால் நடத்தப்படும் வழக்கு என்றும் குறிப்பிட்ட அன்புமணி தரப்பு, தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியது.
ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதிட வேண்டியுள்ளதால், விசாரணையைச் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர். இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வேறு ஒரு தேதியில் விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட விவகாரங்களுக்குள் தாங்கள் இப்போது செல்ல விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.