கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பிரதமருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுக்கின்றனர்.
மதுரையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தின் நுழைவு வாயிலில் இடம்பெற்றிருந்த பெரியார் படம் அகற்றப்பட்டது.
மதுரை மண்டேலாநகரில் நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டை வடிவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். அண்ணா படங்களுடன் பெரியார் படமும் இடம்பெற்றிருந்தது. பாஜகவினர் தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெரியாரின் படம் இடம்பெற்றது கவனம் பெற்றது. இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு நுழைவு வாயிலில் இருந்த பெரியாரின் படம் அகற்றப்பட்டது.
இதற்கிடையே, மதுரை வரும் பிரதமர் மோடி நாளை மாலை 4 மணி அளவில் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். மாலை 4 மணி முதல் 4.20 மணிவரை சாமி தரிசனம் முடித்துவிட்டு பொதுக்கூட்ட நிகழ்வுக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பிரதமருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுக்கின்றனர்.
தொடர்ந்து ராஜகோபுர பாதை வழியாக திருவாச்சி மண்டபம், கம்பத்தடி மண்டபம் சென்று மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்கிறார். சாமி தரிசனத்திற்கு பின்னர் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கோவிலுக்குள் நடந்து செல்வதற்கு ஏதுவாக ராஜகோபுரத்தின் கீழ் உள்ள படிக்கட்டுகளில் நடைமேடை அமைக்கப்படுகிறது. இதே போல கம்பத்தடி மண்டபத்திலும் பிரதமர் செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கருவறைக்கு செல்வதற்கும் உயரமான படிக்கட்டுகளை எளிதாக கடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வாசலில் இருந்து கருவறை வரை 150 மீட்டர் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ள கருவறை முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படுகிறது. சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பிரதமருக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள அலுவலக அறை முன்பு வைக்கப்பட்டுள்ள சிம்மாசனத்தில் பிரதமர் மோடி அமர வைக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
பிரதமர் வருகையை யொட்டி பக்தர்களுக்கு எந்தவித தடையும் இல்லை எனவும் வழக்கம்போல் நாளை காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்படும். அதுவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் மாலை பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்த பின்பு 5 மணி அளவில் வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை (மெட்ராஸ்), சென்னை, தமிழ்நாடு