கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
Tamil Nadu Rain | கோவில்பட்டியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், சாலையில் நீர்பெருக்கெடுத்தது.
தமிழ்நாட்டில் விருதுநகர், கோவில்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது.
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோவில்பட்டியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், சாலையில் நீர்பெருக்கெடுத்தது. மந்திதோப்பு சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சூலக்கரை, பாண்டியன் நகர் அல்லம்பட்டி, சின்னவள்ளி குளம், சத்திர ரெட்டியார்பட்டி, கே. உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், சின்னாளப்பட்டி, ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், உதகை நகரில் அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சாலை, மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், காந்தள் போன்ற பகுதிகளிலும், உதகையைச் சுற்றியுள்ள முத்தோரைப்பாலாடா, நஞ்சநாடு, தலைக்குந்தா, கல்லட்டி போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றில் 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்த நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வடக்கிபாளையம், சி.கோபாலபுரம், கருமாண்ட கவுண்டனூர், ஆர்.பொன்னாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அதேபோல், தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த மேல் மங்கலம், ஜெய்மங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வெற்றிலை கொடிகள் சூறைக்காற்றில் விழுந்து சேதமாகின. ஏற்கனவே நஷ்டத்தில் வாழும் தங்களால் மேற்கொண்டு புது இழப்புகளை எதிர்கொள்ள முடியாது எனவும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.