கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
சென்னை OMR சாலையில் தலைக்கேறிய போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி சாலையில் சென்றவர்கள் மீதும், நின்றிருந்த வாகனங்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற போதை ஆசாமியை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஓஎம்ஆர் சாலையை பதற வைத்த சம்பவத்தின் பின்னணி என்ன?
சென்னை OMR சாலையில் தலைக்கேறிய போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசார்ட்டுகளிலும், பப்புகளிலும் கழுத்து வரை குடித்துவிட்டு காரை தறிகெட்ட வேகத்தில் ஓட்டி வந்து, விபத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள், அன்றாடம் நிகழும் சம்பவங்களாக மாறத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் மீண்டும் ஒரு விபத்து சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் சிக்னல் அருகே கியா கார் ஒன்று மிக அதிவேகமாக வந்துள்ளது. காருக்குள் அமர்ந்திருந்தவருக்கு கட்டுப்பாடு இல்லாததால், காரும் கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு வந்துள்ளது. சாலையில் சென்றவர்கள் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கிச் சென்றனர். இருப்பினும், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு பெண் மீது பயங்கரமாக மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
அதேபோல் சாலையில் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர் மீது மோதியதில் அவருக்கு கை உடைந்தது. இரண்டு பேர் மீது மோதியபோதும் அந்த போதை ஆசாமி காரை நிறுத்துவதாக இல்லை. ஐந்து விபத்துக்களையாவது ஏற்படுத்தினால்தான் ஆத்ம திருப்தி கிடைக்கும் என்கிற நோக்கத்தில் அடுத்தடுத்து விபத்துக்களை அரங்கேற்றியபடி சென்று கொண்டிருந்தார்.
துரைப்பாக்கம் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த மற்றும் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்களை வரிசையாக ஏற்படுத்திக்கொண்டே சென்றிருக்கிறார் அந்த போதை ஆசாமி. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காரை விடாமல் துரத்திச் சென்று துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி பிரதான சாலையில் மடக்கிப் பிடித்தனர். காரை நிறுத்திய பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை வெளியே இழுத்துப் பார்த்தபோது, சுயநினைவின்றி அளவுக்கு அதிகமாக போதையில் இருந்தது தெரியவந்தது. அதைப் பார்த்து கோபமடைந்த மக்கள் அவரது காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் மதுபோதை ஆசாமியை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பாஸ்கர் என்பது தெரியவந்தது. போலீசார் பாஸ்கரிடம் கணக்கீடு அளவீடு கருவியை வைத்து எவ்வளவு மதுபோதையில் உள்ளார் என்பதை பார்த்தபோது சுமார் 255 வரை காண்பித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஸ்கரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தலைக்கேறிய போதையில் தறிகெட்ட டிரைவிங்… அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தி அட்டூழியம்… தர்ம அடி கொடுத்த மக்கள்…