கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
திமுக நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன், திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததை அடுத்து, மதுரையின் முக்கிய திமுக முகமாக விளங்கிய எஸ்.ஆர்.கோபியும் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஆர்.கோபி, 25 ஆண்டுகளாக திமுகவிற்காக உழைத்தோம். தகுதி இல்லாதவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், உண்மையாக உழைப்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தற்போது திமுக, முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை, அது சபரீசன் மற்றும் அவரது தரப்பினரின் கைகளில்தான் உள்ளது எனவும், அவர்களது ஆய்வுகளும், குறுக்கீடுகளுமே கட்சியை வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார். திமுகவில் எல்லோரையும்போல், தான் பதவியை எதிர்பார்த்ததாகவும், ஆனால் திமுகவில் உண்மை, உழைப்பு, விசுவாசத்திற்கு மதிப்பில்லை என்பதால் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நிர்வாகச் சிக்கல்களால் மதுரை மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத பலவீனமான நிலையில்தான் தலைமை உள்ளது என கூறிய எஸ்.ஆர்.கோபி, இந்த முடிவை மு.க.அழகிரியிடம் தெரிவித்தீர்களா என்ற கேள்விக்கு, இது எனது தனிப்பட்ட முடிவு, மு.க.அழகிரி மீது எனக்கு எப்போதும் அன்பு உண்டு, அவர் நட்புக்கு இலக்கணமானவர். ஆனால் அரசியலில் எனது பாதை இன்று மாறியுள்ளது என்று பதிலளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எஸ்.ஆர்.கோபி ஒரு சிங்கம் போன்றவர். தேர்தல் காலங்களில் எங்களையே மூர்க்கமாக எதிர்த்துப் பணியாற்றியவர். மதுரையில் திமுகவிற்காக அரும்பாடுபட்ட இவரைப் போன்றவர்கள் இன்று அங்கே மதிக்கப்படுவதில்லை என்றார். மேலும், மதுரை எப்போதும் அதிமுகவின் கோட்டைதான். மேலும், வரும் தேர்தலில் தென் மாவட்டங்கள் முழுவதையும் அதிமுக கைப்பற்றி, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவது உறுதி என்றும், மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” என்றும் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், யாரும் தங்கள் கூட்டணியில் இணைவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், வரும் கட்சிகளை வரவேற்க தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், கூட்டணி என்பது தேர்தல் அறிவித்த பிறகுதான் முழுமை அடையும் என்றும் தெரிவித்தார்.