கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பின் மாம்பழம் சின்னத்தை முடக்க அவசர விசாரணை கோரிக்கையை மூன்றாவது முறையும் சென்னை உயர்நீதிமன்றம், நிராகரித்தது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து தெரிவித்துள்ளது.
உள்கட்சி பிரச்சினை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து மார்ச் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நேற்று முறையிடப்பட்டது. அப்போது மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ராமதாஸ் தரப்பில் இன்று மீண்டும் 3-வது முறையாக முறையீடு செய்யப்பட்டது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு எண்ணிடப்பட்டுவிட்டதால், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீடு வழக்கு : ராமதாஸ் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐகோர்ட்