கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் Gainer, இல்லையென்றால் loser” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போதுவரை தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக விஜய் மற்றும் நாதக சீமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதில் கடந்த ஞாயிறு அன்று தவெக தலைவர் விஜய், கரூர் அசாம்பாவிதம் தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணைக்கு டெல்லி சென்றார். அதற்கு முன் தினமான சனிக்கிழமையில் இருந்து, என்.டி.ஏ. கூட்டணியில் விஜய்யை இணைக்க முயற்சி என தகவல்கள் வெளியாகிவந்தன.
குறிப்பாக சனிக்கிழமை திடீரென தவெக மாவட்டச் செயலாளர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூட்டினார். இதில் பங்கேற்ற பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் என்.டி.ஏ. கூட்டணியில் இணை இசைவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ஞாயிறு அன்று சிபிஐ விசாரணை முடிந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். பின்னர் கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சி நிர்வாகி நிர்மல் குமார், “பாஜக, அதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
வதந்திகளை நம்ப வேண்டாம்!
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன்…— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) மார்ச் 16, 2026
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “எங்கள் பொதுச் செயலாளர் அப்படியான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தெளிவுப்படுத்திவிட்டார். இருந்தாலும், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவர் Gainer; இல்லையென்றால் loser. Gainer-ஆ loser-ஆ என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.