கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
முரசொலி அறக்கட்டளையால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை உத்தரவிடக்கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார் உள்ளதாக கூறினார். மேலும், முரசொலி அறக்கட்டளையால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிமன்றம் எதுவும் கூறவில்லை எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் எனக்கூறி பொதுநல தாக்கல் செய்துள்ள வெங்கடாசலபதி திருநெல்வேலி மாவட்ட பாஜக நிர்வாகி என்றும் உண்மையை மறைத்து அரசியல் காரணங்களுக்காக இந்த மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார். மேலும், தற்போதைய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்த போது அவரது தூண்டுதலின் பேரில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக போலி புகார் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மனு குறித்து சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்ட்டோர் ஆணையம் மற்றும் முரசொலி அறக்கட்டளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை, தமிழ்நாடு