கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
குறைந்த சம்பளம் வாங்கும் தன்னையே மக்கள் எளிதாக சந்தித்து பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், பெரிய சம்பளம் வாங்கும் விஜயை எப்படி போய் பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரை வரும் செவ்வாய் கிழமை மாலை உடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி என தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், குறைந்த சம்பளம் வாங்கும் தன்னையே மக்கள் எளிதாக சந்தித்து பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், பெரிய சம்பளம் வாங்கும் விஜயை எப்படி போய் பார்க்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். விஜயின் அடுத்த படத்திற்காக காத்திருப்பதாகவும், அவரை தேர்தலில் தோற்கடித்து மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும் என்றும் சத்யராஜ் தெரிவித்தார்.
இதேபோன்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து பிரசாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், மக்கள் பணியில் விஜய்க்கு என்ன வரலாறு இருக்கிறது என வினவினார். விஜய் ஆஸ்கர் விருது வாங்கினால் தான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் நடித்துக் கொண்டே இருந்தால் விசில் அடிப்பேன் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.