2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 505 வாக்குறுதிகளை வழங்கிய திமுக, எதிர்வரும் தேர்தலுக்கு 525 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதேபோல, அரியணை ஏறும் முனைப்பில் இருக்கும் அதிமுக, 297 வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
இரு பிரதான கட்சிகள் வழங்கிய தேர்தல் அறிக்கைகளில் மகளிர் வாக்காளர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் கவனம் ஈர்த்துள்ளன.
அதன்படி, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்க, பழைய பொருட்களை மாற்றிக் கொள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேநேரம், அதிமுக ஆட்சி அமைந்தால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் சூழலில், அதை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுகவும், ’குல விளக்கு’ என்ற திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அதிமுகவும் அறிவித்துள்ளன.
முதியோர் உதவித்தொகையை ஆயிரத்து 200 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என இரு கட்சிகளும் வாக்குறுதி வழங்கியுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி தந்துள்ளார்.
5 ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அதேபோல, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என திமுகவும், வீடு இல்லாத குடும்பங்களுக்கு ’அம்மா இல்லம்’ திட்டத்தில் விலையில்லா வீடுகள் வழங்கப்படும் எனவும், அதிமுக வாக்குறுதியாக தந்துள்ளது.
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இருகட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாகவும், காப்பீடு தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி தந்துள்ளார்.
ஏற்க முடியாத சில ஷரத்துகளை குறிப்பிட்டு தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும் என அதிமுகவும் வாக்குறுதி வழங்கியுள்ளன.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.