கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.02) முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாநகரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வெற்றி திலகம் இட்டு வாழ்த்தி தேர்வு அறைகளுக்கு அனுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.02) முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாநகரின் தேரடி வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தேர்வில் மாணவிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் வெற்றி திலகம் இட்டு வாழ்த்தினர். மேலும், பல மாணவிகள் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று தேர்வு அறைகளுக்குச் சென்றனர். இந்நிகழ்வு பள்ளி வளாகத்தில் உணர்ச்சி மிகுந்த தருணமாக அமைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 27,198 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
12th Exam: தேர்வுக்கு முன் நெகிழ்ச்சி தருணம் – மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்ட ஆசிரியர்கள்…